உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி மாணவர்கள் குழு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த பரீட்சையை ஒத்திவைக்க முடியாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, மனுவை விசாரிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை என்பதால், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
மனுதாரர்கள் கோரியபடி உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் ஏனைய பரீட்சைகளும் பிற்போடப்படும் அபாயம் காணப்படுவதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனவே, மனுதாரர்கள் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது என்றும், அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரினார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகள் குழு இந்த முடிவை அறிவித்தது.