களுத்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 1000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை பன்வில பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உப பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை பலதொட்ட பிரதேசத்தில் சந்தேகநபரை சோதனையிட்டதில்போதை மாத்திரைகளும், கடத்தலுக்கு பயன்படுத்திய கையடக்க தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் பாடசாலைகள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டே இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு மாத்திரை 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தேகநபரின் வாக்குமூலங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக சுற்றிவளைப்பில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
