மகாராஷ்டிரா – தானே பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறன்று மசூதியில் மாலை தொழுகையை முடித்துவிட்டு, வீடு திரும்பிய குறித்த சிறுவனை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் பணம் பெறும் நோக்கில் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தானேவின் பத்லாபூரில் உள்ள கோரேகான் கிராமத்தை சேர்ந்த 9 வயதான இபாத் என்ற சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபரான சல்மான் மௌலவி என்பவர், புதிய வீடு கட்டுவதற்காக 23 இலட்சம் ரூபா பணம் பறிக்கும் நோக்கில் குறித்த சிறுவனை கடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று தாமதமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சிறுவனின் தந்தைக்கு கிடைத்த தொலைப்பேசி அழைப்பில் பணம் கொடுத்தால் மகனை உயிருடன் விடுவதாக சந்தேக நபர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மேலதிக விபரங்கள் ஏதுமின்றி அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.
சிறுவன் காணாமல் போனதை அறிந்த பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பொலிஸாரும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திங்கள் கிழமையன்று மதியம் சந்தேக நபரான சல்மான் வசிக்கும் இடத்தை கண்டுபிடித்த பொலிஸார் அங்கு சோதனையிட்ட போது, வீட்டிற்கு பின்னால் சாக்குப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சல்மானும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.