மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவித்து கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று (6) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன்போது மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதற்கமைய 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிவான், பிரதான சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த சந்தக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்த நீதிமன்றம், இம்மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைத்தல், வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல் உள்ளிட்ட பிணை நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளது.