பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று (29) முற்பகல் நடைபெற்ற “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக வில்கமுவ கிராம அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி முன்னிலையில் அறிவித்தமையும் விசேட அம்சமாகும்.
அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஆரம்பமாகியதோடு நேற்று (29) வரை 35,920 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் 14,537 விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர் ஊடாகவும், 21,383 விண்ணப்பங்கள் இணையத்தளத்தின் ஊடாகவும் கிடைத்துள்ளன.