அனுராதபுரம், தலாவ சுற்றுவட்டத்தில் எரிபொருள் பௌசருடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் 10 வயது சிறுமி நேற்று (10) இரவு உயிரிழந்துள்ளார்.
தலாவ கரகஹவ பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (10) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றதாக தலாவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு சபுகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று, தலாவ நகர சுற்றுவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் தாயும் மகளும் பயணித்துள்ளதுடன், பௌசருடன் மோதியதில், சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து இருவரையும் தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய பௌசரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.