பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடைசெய்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் ஆஜராகுமாறு சந்தேக நபருக்கு பிணை நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற பல குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் இந்த சந்தேகநபர் மீது முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் தெரிந்தே வேண்டுமென்றே இவ்வாறான தவறுகளை செய்வதாகவும் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் நீதிமன்றில் தெரிவித்தது.
கொம்பனி தெருவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மெட்ரோ வீட்டுத் தொகுதியில் வீடொன்றை வழங்குவதாகக் கூறி முறைப்பாட்டாளரிடம் 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர் மோசடி செய்துள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர. இரண்டு தடவைகளில் காசோலைகள் மற்றும் பணத்தின் மூலம் சந்தேக நபருக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டது.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் 07வது பிரிவு நீதித்துறை பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் திஸாநாயக்க மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் (69043) உலகெதர ஆகியோர் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.