பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷீப் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 53வது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை முன்வைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவை வழங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், கடந்த காலங்களில் இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களை பாதுகாப்புப் படையினர் கையாண்ட விதம் தொடர்பில் தனது ஆட்சேபனையையும் தெரிவித்தார்.
போராட்டத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டமை, நகைச்சுவை நிகழ்ச்சிகளின் போது தெரிவித்த கருத்துக்களுக்காக மக்கள் கைது செய்யப்பட்டமை, போராட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கைது போன்ற விடயங்களும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.