ஏழு நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு விசா காலம் நிறைவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் கீழ், செல்லுபடியாகும் விசாக் காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு விசா கட்டணத்துடன் கூடுதலாக 500 அமெரிக்க டொலர் அபராதத்தை மறுபரிசீலனை செய்ய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் செய்த கோரிக்கைக்கு அமைச்சர்கள் ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 07 நாட்களுக்கு மேல் மற்றும் 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாகத் தங்கியிருந்தால் 250 அமெரிக்க டொலர்கள் அபராதம் மற்றும் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் 500 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், முதலீட்டாளர்களை ஈர்த்தல் மற்றும் இலங்கையில் இயங்கிவரும் வெளிநாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மேற்படி தண்டப்பணம் செலுத்த வேண்டியதன் காரணமாக ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.