அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற மூன்று வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க எதிர்வரும் இரண்டு வாரங்களில் மூன்று நிறுவனங்களுடனும் உரிய உடன்படிக்கைகளில் கையொப்பமிட இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இலங்கையில் பெற்றோலியப் பொருட்கள் உற்பத்திகள் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தலுக்காகச் சீனாவின் சைனோபெக் ஃபுவல் ஒயில் லங்கா தனியார் நிறுவனம், அவுஸ்திரேலியாவின் யுனைட்டெட் பெற்றோலியம் நிறுவனம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரின் கூற்றுப்படி ஒவ்வொரு நிறுவனமும் உள்ளூர் சந்தையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் இயக்கப்படும் 450 நிரப்பு நிலையங்களில் தலா 150 நிரப்பு நிலையங்களைக் கையாளும்.
