ஸ்ரீபாத வீதியில் உடமல்வ வரையிலான கடைகளில் விசேட சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடைகளில் இருந்து உணவு மாதிரிகளை எடுத்து இந்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்தார்.
லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் அண்மையில் இறந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஸ்ரீ பாத வீதியில் உள்ள பெருமாண்டியா பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பெண்ணே பலியானவராவார்.
காய்ச்சல், வாந்தி, தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளைக் காட்டியுள்ள லிஸ்டீரியா, அசுத்தமான உணவு மூலம் பக்டீரியாவை உட்கொள்வதால் நோய்த்தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.