ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று (02) அதிகாலை மெஸ்ஸியின் மனைவியின் உறவினருக்குச் சொந்தமான பல்பொருள் அங்காடிக்கு துப்பாக்கி ஏந்திய இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி மெஸ்ஸிக்கு கொலைமிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ஜென்டினாவில் உள்ள சான்டா ஃபே மாகாணத்தில் உள்ள ரொசாரியோ நகரில் ‘யூனிகோ’ என்ற இந்த பல்பொருள் அங்காடி உள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடை மீது 14 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
அப்போது துப்பாக்கித்தாரிகள் இருவரும் கடையின் முன் பலகையில் மெஸ்ஸிக்கான கொலை மிரட்டலை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘மெஸ்ஸி, நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம். ஜாவ்கின் ஒரு போதைப்பொருள் வியாபாரி. அவர் உங்களை கவனிக்கப் போவதில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த மிரட்டல் அறிக்கை குறித்து மெஸ்ஸியோ அல்லது அவரது மனைவி அன்டோனெல்லோ ரகுசோவோ அல்லது குடும்பத்தினரோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
