இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதத்திற்கான சம்பளத்தை தாமதமின்றி வழங்குவதற்கு அண்மையில் கூடிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையானது அரசியல் மயப்படுத்தல் காரணமாக பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், எனவே ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது முறையான நடைமுறைகளை பின்பற்றாததன் விளைவாக எழுந்துள்ள பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய சம்பள ஆணைக்குழுவுடன் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாவனையில் இல்லாத இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 400 பேருந்துகள் உட்பட 1800 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் இவ்வருடம் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவையான சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
