யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மானிப்பாய் – ஆலடி சந்திப்பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அவர்களில் உந்துருளியின் பின்னால் அமர்ந்து சென்றவர் தலைகவசம் அணிந்திருக்கவில்லை தெரிவிக்கப்படுகிறது.
தம்மீதான குற்றத்தை ஏற்றுக் கொண்ட குறித்த நபர் தமக்கான தண்டனையை எழுத்துமூலம் தருமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளார்.
இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையில்கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் அங்கு சென்ற இராணுவத்தினர் அவரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. பின்னர் அங்கு சென்ற விசேட அதிரடி படையினர் அவரை கைது செய்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, குறித்த நபர் மதுபோதையில் இருந்ததாக தெரிவித்தார்.
அந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மானிப்பாய் பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.