கடந்த பாதீடு தயாரிப்பின் போது உண்மைக்கு அப்பாற்பட்ட அரச வருமானத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பொது நிதி தொடர்பான குழுவிற்கு நேற்று (24) அழைக்கப்பட்ட போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய இக்கட்டான பொருளாதார நிலைமையின் உண்மையான யதார்த்தத்தை மறைக்க வேண்டாம் எனவும் குறுகிய அரசியல் நலன்களை பொருட்படுத்தாமல் கட்சி பேதமின்றி நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கு ஆதரவளிக்குமாறும் அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதற்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்த உலக வங்கி இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.