வெல்லவாய காவல்துறை பிரிவுக்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி இன்று (03) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லாவல நீர்வீழ்ச்சிக்குள் பிரவேசிப்பது அல்லது நீராடுவது இன்று முதல் முற்றாக தடை செய்யப்படுவதாகவும் மறு அறிவித்தல் வரை இது அமுலாகும் எனவும் வெல்லவாய பிரதேச செயலாளர் சந்தன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததுடன், கடந்த சில மாதங்களில் மட்டும் எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, குறித்த நீர்வீழ்ச்சிக்கு மக்கள் செல்வதை தடுக்கும் நோக்கில் வெல்லவாய சுற்றாடல் குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உரிய பாதுகாப்பு திட்டம் வகுப்பப்பட்ட பின்னர் நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதிழ வழங்கப்படும் என வெல்லவாய பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.