Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் கவனிக்க வேண்டிய விடயங்கள்

பதப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் கவனிக்க வேண்டிய விடயங்கள்

பிஸ்கெட்டுகள் முதல் சிப்ஸ் வரை பதப்படுத்தப்பட்டு பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றை அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என உணவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அவற்றை சார்ந்திருக்கும் நிலை தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. கார்ன் ப்ளேக்ஸ், ஓட்ஸ், நார்ச்சத்துள்ள பிஸ்கெட், வேர்க்கடலை, வெண்ணெய் உட்பட பல்வேறு பொருட்கள் பொதியிடப்பட்ட நிலையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு பொதியின் மீதும் அதில் உள்ள பொருட்களின் ஊட்டச்சத்து அளவுகள் கிராம் வடிவில் இடம்பெற்றிருக்கும். அதில் என்னென்ன பொருட்கள், எந்தெந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் சில பொருட்களைப் பார்த்து, அவை ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதைப் புரிந்துகொள்ளலாம். அத்தகைய பொருட்கள் தொடர்பில் கீழே காணலாம்.

  1. சீனி

இது சுவைக்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது. ஒரு பொருளை வாங்கும் போது, ​அதில் சேர்க்கப்பட்டுள்ள சீனியின் அளவை கவனிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட சீனி ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும். சில உணவுப் பொருட்களில், சேர்க்கப்படும் சீனியின் அளவு வெளிப்படையாகத் தெரியாது. தேன் மற்றும் வெல்லம் வடிவில் சேர்க்கப்படும் சீனி சுத்தமானது மற்றும் ஆரோக்கியமானது என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

  1. உப்பு

சீனியைப் போன்றே உப்பு, சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக உணவில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் உப்பின் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக சோடியம் எவ்வளவு சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதைச் சரி பார்க்க வேண்டும். ஏனென்றால், நாள் முழுவதும், பல்வேறு அளவுகளில் உப்பு உள்ளடக்கம் கொண்ட பல உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம்.

நாளடைவில் அதில் கலந்திருக்கும் சோடியம் உடலில் சேர்ந்துவிடும். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும் கல் உப்பு, இமயமலை சிவப்பு உப்பு, அயோடின் கலந்த உப்பு என உப்பில் பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் உடலுக்கு நன்மை மட்டுமல்ல தீமையும் தரக்கூடியவை. எனவே உப்பு கலந்த உணவுப் பொருட்களை வாங்கும்போது கவனமாகச் செயல்பட வேண்டும்.

  1. தானியங்கள்:

இவை நார்ச்சத்து மற்றும் கூடுதல் ஊட்டச்சத்துக்காகச் சேர்க்கப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட தானியங்களாக இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக ரவை மற்றும் கோதுமை மா போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் உள்ளடங்கி இருக்கும் பொருட்கள் பற்றி சரியாகக் குறிப்பிடப்பட்டிருக்காது. முழு தானியங்களைப் பொறுத்தவரை நார்ச்சத்து அதிகம் கொண்டவையாக இருந்தால் தாராளமாக வாங்கலாம். மா பொருட்களுக்கும் இது பொருந்தும். ‘மல்டிகிரேன் மா’ என்று குறிப்பிடப்பட்டால், அதில் முழு தானியங்கள் மட்டுமே இருக்கும் என்று கூறிவிட முடியாது. அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரிபார்க்க வேண்டும்.

  1. கொழுப்பு:

இதுவும் சுவைக்காகச் சேர்க்கப்படுகின்றது. இருப்பினும் பொதியிடப்பட்ட உணவு பொருட்களில் உள்ளடங்கி இருக்கும் கொழுப்புகள் ஆரோக்கியமானதாகவோ அல்லது ஆரோக்கியமற்றதாக இருக்கலாம். எனவே, அது எந்த வகையான கொழுப்பைக் கொண்டுள்ளது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சில உணவுப் பொருட்களில் கொழுப்புகள் பதப்படுத்தப்படுகின்றன. அவை பயன்படுத்த எளிதானது. மற்றும் நீண்ட காலம் காலாவதியாகாது. அதனை நீண்ட காலத்திற்கு உபயோகிப்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்காது.

  1. செயற்கை வண்ணங்கள்:

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கும் முன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களை நன்றாக வாசித்துப் பார்க்க வேண்டும். செயற்கை வண்ணங்களைப் பொறுத்தவரை அவை சுவைக்காக மட்டுமே சேர்க்கப்படுகின்றன. பசியைச் சமாளிப்பதற்கும் வித்திடும். ருசியை மட்டுமே குறி வைத்து அந்த உணவுப் பொருள் தயாரிக்கப்பட்டிருக்கும். அதற்குச் செயற்கை வண்ணங்கள் துணை புரியும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உணவின் தரம் மிகவும் முக்கியமானது. சுவைக்காக அவற்றை நீண்ட காலம் உட்கொள்ளும் போது, புற்றுநோய் தோன்றுவதற்கு வழிவகுத்துவிடும். மேலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவித்துவிடும்.

  1. சாறுகள் (எக்ஸ்ட்ராக்ட்):

பொதுவாக சாறுகள் காய்கறிகள், பழங்களைச் செறிவூட்டி தயாரிக்கப்படும். இவையும் சுவை, நிறம், ஊட்டச்சத்து போன்ற விடயங்களுக்காக சேர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் இந்த சாறுகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்

Keep exploring...

Related Articles