தற்போது கிடைக்கப்பெற்றுள்ள மற்றும் எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் தொகையை முறையாக நாடுமுழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதியமைச்சு, மத்திய வங்கியுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புடன், போதியளவு எரிபொருளை கோருவதற்கு வசதியளித்து, நாணயக் கடிதங்களை திறக்க திட்டம் வகுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது, ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கினார்.
நீண்ட கால எரிபொருள் இறக்குமதி செய்ய எரிபொருள் விநியோகத்தர்களுடன் உடன்படிக்கையை கைச்சாத்துவதில் காணப்படுகின்ற இயலுமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
எரிபொருள் விநியோகிக்கும் போது, பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொலிஸ் கண்காணிப்பின் கீழ், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக, தனியார் பஸ்கள், சுற்றுலாத்துறை பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்கு, அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.