டொலர் பற்றாக்குறை காரணமாக சுமார் மூன்றரை இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய வர்த்தகர் சங்கத்தின் தலைவி டானியா அபேசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் பற்றாக்குறை என்பன காரணமாக மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு தொழிற்சாலைகள் மற்றும் நிர்மாணத் தொழில்களை நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆடைக் கைத்தொழில், மின் உபகரண தயாரிப்பு, மசாலாப் பொருட்கள் உற்பத்தி மற்றும் பேக்கரி உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகள் தற்போதைக்கு மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
ஒருசில உற்பத்திகளின் மூலப்பொருட்களில் 90 வீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனினும் டொலர் பற்றாக்குறை காரணமாக குறித்த மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாததால் பல தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் காணப்படுகின்றன.
இதனால் சுமார் மூன்றரை இலட்சம் பேர் தொழில்களை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.