சட்டவிரோதமான முறையில்இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மருந்து கையிருப்பு இன்று (11) காலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சுங்க அதிகாரிகள் குழுவினால் கைப்பற்றப்பட்டதாக விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்திய பயணி ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பல்வேறு மருந்துகளை விமானம் மூலம் கடத்தி, நாடு முழுவதும் உள்ள தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் இன்று அதிகாலை 04.30 மணியளவில் இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-174 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது ஆண்களின் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், பெண்களின் கருவுறுதலை மேம்படுத்தும் மருந்துகள் மற்றும் பெண்களின் தோலை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் உட்பட பல வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.