12 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹொரணை, ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர், களுத்துறை டயகம பிரதேசத்தில் வசிக்கும் மூவர் மற்றும் சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க உதவிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தனது நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வந்துள்ளார்.
பொலிஸாரின் மேலதிக விசாரணையில், சுமார் இரண்டு வருடங்களாக வீட்டின் தேவைக்காக பணம் மற்றும் பிற பொருட்களைக் கொடுத்து சிறுமியை இந்தக் கும்பல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கைது செய்யப்பட்ட பேருந்து நடத்துனர், ஹொரணை, ரெமுன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் சிறுமியை தடுத்து வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த சிறுமி நடத்துனரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து நடத்துனர் தன்னை கடத்திச் செல்வதற்கு முன்பு சுமார் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நபர்களால் கடுமையாக தாம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி தற்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.