புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் பிரித்தானிய யுவதியிடமிருந்து பயணப் பொதியை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்துகளில் பொருட்களை விற்கும் வர்த்தகராக பணிபுரியும் இவர், களனி – பெத்தியகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிதத வெளிநாட்டுப் பெண்ணின் பயணப் பொதியில் சுமார் 20,000 டொலர் பெறுமதியான சொத்து இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருடப்பட்ட மடிக்கணினி, கெமரா, வங்கி அட்டைகள், கடவுச்சீட்டு உள்ளிட்ட அனைத்தையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கை தொடர்பில் சுற்றுலா வீடியோ எடுப்பதற்காக எல்ல நோக்கி பயணிக்கவிருந்த குறித்த யுவதியின் பயணப் பொதியை சந்தேகநபர் திருடியுள்ளார்.
பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, திருடப்பட்ட கெமெராவை தொம்பே பிரதேசத்தில் ஒருவருக்கு இரண்டு இலட்ச ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதுடன், பாஸ்வேர்டை அழிப்பதற்காக பேலியகொட பிரதேசத்தில் ஒரு கணினி பழுதுபார்க்கும் இடத்திற்கு 5,000 ரூபாவை முற்பணமாக செலுத்தி மடிக்கணினி வழங்கியிருந்த நிலையிலும், எஞ்சிய பொருட்கள் சந்தேக நபரின் வசமிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.