சட்டவிரோதமான முறையில் உதிரிபாகங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை, போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த மூன்று இடங்களை பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 48 சிசி மற்றும் 41 மொவாட் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல், வாரியபொல, மஸ்பொத்த ஆகிய பிரதேசங்களில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள்கள் குருணாகல் பிரதேசத்தில் வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவரினால் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, பொருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் வாங்கும் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய முடியாது என வாடிக்கையாளர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல மற்றும் குருநாகல் பொலிஸ் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.