கற்பிட்டி – நுரைச்சோலை – ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஏழு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வீடொன்றில் இளைஞர்கள் குழுவொன்று போதைப் பொருள் பாவிப்பதாக நுரைச்சோலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டை சுற்றிவளைத்த நுரைச்சோலை பொலிஸார், அங்கு தங்கியிருந்த ஏழு பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏழு பேரில் ஆறு பேர் நுரைச்சோலை மற்றும் ஆலங்குடா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் ஐஸ் போதைப் பொருள் பாவித்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஒரு கிராம் 200 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளைநுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.