மத்திய மாகாண சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வெலம்பொட – வெரவல வட்ட சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 வயதுடைய சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெலம்பொட பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் கடந்த 17 நாட்களுக்கு முன்னர் ஹட்டன் நீதிமன்றத்தினால் இந்த சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி பிற்பகல் நான்கிற்கும் ஐந்து மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சிறுவன் படுக்கை விரிப்பின் உதவியுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை பதில் நீதவான் செல்வி நந்தனி காந்திலதா சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கண்டி நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (27) இடம்பெறவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் தலையணைக்கு அடியில் கடிதம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
‘இந்தக் கடிதத்தை என் குடும்பத்தாருக்கு எழுதுகிறேன், நான் திடீரென்று இறந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம். சோகமாக இருக்க வேண்டாம் என்று என் அன்பான சிந்துவுக்கு சொல்லுங்கள்.’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலம்பொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.