குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கொழும்பு, மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொய் வழக்கில் கைது செய்து, தனது சுய மரியாதைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்தே அவர் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, பொலிஸ் மா அதிபர் ஜகத் நிஷாந்த மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை வழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் தமக்கு எதிராக தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.