வீட்டில் உயிரிழந்த பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது பிரதேச கிராம உத்தியோகத்தருக்கோ அறிவிக்காமல் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளத் தயாரான சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொத்துஹெர – பரபாவில – பெலிகொல்லவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 80 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 13 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கோ அல்லது பிரதேச கிராம உத்தியோகத்தருக்கோ தெரிவிக்காமல் கடந்த 14ஆம் திகதி பொல்கஹவெல பிரதேசத்தில் உள்ள மலர்சாலையொன்றுக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் பேத்தி என கூறிக்கொள்ளும் இம்புல்கஸ்தெனிய பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 15ஆம் திகதி பொல்கஹவெல சுடுகாட்டில் சடலத்தை தகனம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதேசவாசி ஒருவர் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பெண்ணின் இறுதிக் கிரியைகளை நிறுத்தியுள்ள பொத்துஹெர பொலிஸார் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.