இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு தொடர்பில் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு குறுகிய கால அவகாசம் தேவை என சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட செயற்பாட்டாளர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் முழுமையான பொருளாதார மீட்சிக்கான உத்தரவாதம் இன்னும் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 2.9 பில்லியன் டொலர் கடன் தொகையின் இரண்டாம் தவணைக்கு குறிப்பிட்ட திகதியோ அல்லது குறிப்பிட்ட கால எல்லையோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடினமான காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இலங்கை தொடர்ந்து பெறும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.