ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்க தரப்பு கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, ஏ. எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர் .
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, சில தொழிற்சங்கங்களும் தமது கட்சியைச் சேர்ந்த சில உள்ளுர் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் முரண்பாடான நிலையில் கருத்து வெளியிடுவதாகவும், ஆனால் அந்த பிரச்சினைகள் எதுவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்காத அளவுக்கு தீவிரமானவை அல்ல எனவும் தெரிவித்தார்.
கலந்துரையாடல் மூலம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் எனவும், அதற்காக மாதத்திற்கு ஒரு நாள் ஜனாதிபதியை நேருக்கு நேர் சந்திப்பது அவசியமானது எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.