கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து, பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை தனது தோழியிடம் ஒப்படைத்துவிட்டு இளம் பெண் தலைமறைவாகி உள்ளதாக கலேவெல பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.
அவசர பயணம் செல்வதாகவும் தனது குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்து சந்தேக நபர் சென்றதாகவும், மாலை வரை திரும்பி வரவில்லை எனவும் கைக்குழந்தையுடன் கலேவெல பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த 23 வயது யுவதி தெரிவித்துள்ளார்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் தனது தோழி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்ததாகவும் அவர் பெற்ற குழந்தையுடன் கலேவெல ஹோட்டலில் கடந்த 4ம் திகதி ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியதாகவும் குறித்த தோழி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது தோழியை ஏமாற்றி குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு ஓடியவர் வெலிமடை, மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணாவார்.
பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட 5 நாட்களே ஆன சிசு தம்புள்ளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைக்குழந்தையுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணும் கலேவெல பிரதேசத்தில் வசிப்பவராவார்.
சந்தேகத்திற்குரிய பெண்ணை கைது செய்ய கலேவெல காவல் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.