கொலன்னாவ – ஒபேசேகரபுர பிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவனை வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடவைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், சிறுவனுக்கு ஹெரோயின் போதைப் பொருளை வலுக்கட்டாயமாக செலுத்தி, வீதியில் யாசகம் செய்ய ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கடந்த 9ஆம் திகதி இந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவனை தொடர்ந்து விசாரித்ததில், சந்தேகநபரால் அவர் அம்பேபுஸ்ஸ பகுதியில் உள்ள சிறுவர் இல்லமொன்றிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அந்தப் பெண்ணின் மகனுடன் வீதியில் யாசகத்துக்காக அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது.
சிறுவனின் வாய் மற்றும் தொடை உட்பட பல்வேறு பகுதிகளில் பல தீக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் தற்போது கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.