களுத்துறை – நாகொட பிரதேசத்தில் ஐந்து மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடுதிக்கு சிறுமி மற்றும் ஏனைய குழுவினரை வாடகை அடிப்படையில் அழைத்துச் சென்ற கார் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது பொலிஸார் தேடிவரும் இளைஞர் ஒருவரும் இந்த காரிலேயே தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவியுடன் இரு ஆண்களும் மற்றுமொரு பெண்ணும் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அதில் குறித்த பெண்ணும் ஆண் ஒருவரும் நேற்று (7) கைது செய்யப்பட்டனர். மற்றைய இளைஞர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
முந்தைய செய்தி
களுத்துறை தெற்கு – காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள தொடருந்து மார்கத்துக்கு அருகில் நிர்வாண நிலையில் 16 வயது சிறுமி ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் (6) கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த சிறுமி மற்றுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் குறித்த விடுதிக்கு சென்றுள்ளதுடன், அவர்கள் விடுதியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
அதில் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் விடுதியின் ஒரு அறைக்குள் சென்றுள்ளதுடன், உயிரிழந்த சிறுமியும் மற்ற ஆணும் மற்றைய அறைக்குள் சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் மது அருந்தியதாக விடுதியில் சேவையாற்றும் ஊழியர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, விடுதியின் ஒரு அறைக்குள் சென்ற ஒரு பெண்ணும்இ ஒரு ஆணும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
பின்னர் சிறுமியுடன் இருந்த மற்றைய இளைஞரும் விடுதி அறைக்குள் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.