மாத்தறை – பம்புரன தொடருந்து நிலையத்துக்கு அருகில் சிறுமியொருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலிலேயே நேற்று மாலை குறித்த சிறுமி மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
ஹீன்தெடிய தர்மராஜ வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் பயின்றுவந்த, ஹீன்தெடிய – பென்தொடகேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது நண்பிகள் மூவருடன், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், தண்டவாளம் வழியாக நடந்துசென்றபோது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.