60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒரு வருட காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்துவதற்கு பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதி வழங்காததன் காரணமாக நீண்ட தூர சேவைகள், எரிபொருள் போக்குவரத்து மற்றும் சரக்கு ரயில் சேவைகள் உட்பட பல தொடரரூந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கும் அரசின் கொள்கை முடிவுடன் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சசு அறிவித்துள்ளது.
எனினும், குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாததால், கடந்த சில தினங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20க்கும் அதிகமான ரயில் சாரதிகள் தமது சேவையை நிறைவு செய்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, அநுராதபுரம் மற்றும் பதுளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்தபடும் ரயில் சேவைகள் சில தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.