2022, 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை செலுத்த வேண்டிய தவணைக் கடன் மற்றும் வட்டியை குறித்த காலப் பகுதியில் அறவிடப்போவதில்லை என சீனா அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்கான கடன், வட்டியை மீள செலுத்துவதற்கு எக்ஸிம் வங்கி எனப்படும் சீனாவின் இறக்குமதி – ஏற்றுமதி வங்கி நிவாரணக் காலத்தை வழங்கியுள்ளதாக சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெங் வென்பின் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
இதன் ஊடாக இலங்கையின் குறுகிய கால கடனை மீள செலுத்துவதற்கு நிவாரணம் கிடைக்கும் என்பதே சீனாவின் எதிர்பார்ப்பாகும்.
சீன எக்ஸிம் வங்கி இலங்கையுடன் மத்தியகால, குறுகியகால கடனை மீள செலுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் இலங்கையின் கடன் ஸ்திரநிலையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.