இலங்கை போக்குவரத்துச் சபையின் நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை தனியார் அல்லது வேறு தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு திறைசேரி அறிவித்துள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (21) பனாகொடவில் தெரிவித்தார்.
இந்திய கடனுதவியின் கீழ் பெறப்பட்ட 40 பேருந்துகளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக 107 பேருந்து டிப்போக்களில் 800 பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் இதற்காக பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய 1600 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.