துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளுக்கு இடையில் பிறந்த ஆயா என்ற குழந்தை சிரியாவின் சுகாதார அதிகாரிகளால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கடத்தல், தத்தெடுப்பு உள்ளிட்ட மோசடிகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையும் அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் வன்முறை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஆண் தாதி ஒருவர் ஆயுதம் ஏந்திய இருவருடன் வந்து முகாமையாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும், சிரியாவின் சுகாதார இயக்குநரகத்தின் தலைவர் வைத்தியர் அஹமட் ஹஜ் ஹசன், இது குழந்தை கடத்தல் தொடர்பான சம்பவம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறுமி தொடர்பில் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை தத்தெடுக்க முன்வந்துள்ளனர்.
இருப்பினும், சுகாதார இயக்குநரகம் அவரது நலனுக்கு முன்னுரிமை அளிப்பதையும், தத்தெடுப்பு செயல்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பது தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
கடந்த 6ம் திகதி தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜிண்டேரிஸ் நகரில் உள்ள வீடு இடிந்ததையடுத்து ஆயாவின் தாயாருக்கு உடனடியாக பிரசவ வலி ஏற்பட்டது.
நிவாரணக் குழுக்கள் தாயையும் குழந்தையையும் கண்டுபிடித்தபோது, குழந்தை இன்னும் தாயின் தொப்புள் கொடியால் இணைக்கப்பட்டிருந்ததாகவும், பிரசவத்திற்குப் பிறகு தாய் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
குழந்தையின் தந்தை உட்பட உறவினர் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட போது, அங்கு வந்த தூரத்து உறவினர் ஒருவர் குழந்தையை அஃப்ரினில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆயா, தற்போது ஆரோக்கியமாக உள்ளார்.
மருத்துவமனையின் மேலாளர் காலித் அத்தியா, அவரது மனைவி ஆயாவுக்கு தாய்ப்பால் கொடுப்பதாகவும், அவளை தத்தெடுக்கும் வரை தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.