இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80 வீதமானவை இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மருந்துகள் அல்ல எனவும் அவற்றுக்கான மதிப்பீடு , பரிந்துரைகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அங்கொட தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, ‘Severit’ என்ற நிறுவனத்திடமிருந்து 36 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், அந்த மருந்துகள் இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை என வைத்தியர் தெரிவித்தார்.
அத்தியாவசிய மருந்துகளை மட்டும் இறக்குமதி செய்ய கிடைக்கும் பணத்தில் தேவையற்ற மருந்துகளை இறக்குமதி செய்து பணம் வீணாகுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், டெண்டர் கோராமல் மருந்துகளை வாங்க சப்ளையர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.