அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு தொடர்பான திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (09) கொழும்பு நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் நிதியில் இருந்து தனது தனிப்பட்ட கைத் தொலைபேசிக்காக கிட்டத்தட்ட 230,000 ரூபாவை செலுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்படி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச சட்டப்படுத்தப்பட்ட அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்தை செய்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது.
இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை பெப்ரவரி 9ஆம் திகதி சமர்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.