இலங்கையின் தலைமைத்துவம் மற்றும் நிதித்துறையில் சீர்திருத்தங்கள் மூலம் விரைவான பொருளாதார மறுமலர்ச்சியை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) உப தலைவர் ஷிக்சன் சென் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்மொழியப்பட்ட திட்டங்களை இறுதி செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவித்த சென், இலங்கையின் அபிவிருத்திக்காகவும் பொருளாதார மற்றும் நிதி சவால்களை சமாளிக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவை உறுதியளித்தார்.
மின்சாரம், எரிசக்தி மற்றும் பெற்றோலியம் துறைகளை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் பொது நிதி துறைகளுக்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவருக்கு விளக்கினார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் பின்தங்கிய பிரிவினரைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் எடுத்துரைத்தார்.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்கள், கிராமப்புற விவசாயத்தை மேம்படுத்துதல், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்களையும் பிரதமர் விவரித்தார்.
கொவிட் -19 தொற்றுநோயின் போது மற்றும் தற்போதைய பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் அவசர உதவி கடன்கள் மற்றும் மானியங்களுக்காக ADB க்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
ADB-ன் நிதியுதவி திட்டங்கள், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உதவி வழங்குவதிலும், விவசாயிகள் உட்பட ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதிலும் அரசாங்கத்திற்கு முக்கியமான ஆதரவை வழங்குவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.