ஜனாதிபதியின் ஆவணங்களைக் கொண்டு செல்லக்கூடிய சர்வதேச தரத்தினாலான சிறப்புப் பை (Attaché Case) இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகேயினால் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களால் இந்த சிறப்புப் பை வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகத் தலைவர்கள் பயணம் செய்யும் போது முக்கியமான மற்றும் இரகசியமான ஆவணங்களை எடுத்துச் செல்ல ஒரு சிறப்புப் பையை (Attaché Case) பயன்படுத்துவது மரபாகும்.
இந்த உலக பாரம்பரியத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, சர்வதேச தரத்திற்கு அமைவாக அவ்வாறான பை ஒன்றை உருவாக்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தார்.
இதன்படி, ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, இராணுவத் தளபதியின் நேரடிக் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் விவரக்குறிப்புகளின்படி, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் தலைமையிலான துறைசார் நிபுணர்கள் குழு, சிறப்பு தொழில்நுட்பத்துடன் தனித்துவமான வடிவமைப்பாக இந்த பையை உருவாக்கியது.
