காலி – கராப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸாரால் நேற்று (31) கைப்பற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு சொந்தமானது என கூறப்படும், வரி அறவிடாது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ஜீப் நேற்று (31) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
சொகுசு ஜீப்புடன் கைது செய்யப்பட்ட நபரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேகநபர் மீது வாகனம் தொடர்பான 07 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சாட்சியங்களை பொலிஸார் முன்வைத்தனர்.
இந்த வாகனம் பல வருடங்களாக இயங்கி வருவதாகவும், திடீரென இந்த வாகனத்தை கையாள்வது ஒருவித அரசியல் சதி எனவும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
உண்மைகளை விசாரித்த காலி பிரதான நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன, வழக்கு விசாரணையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், சந்தேக நபரை அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், இது தனது வாகனம் அல்ல என முன்னாள் அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
தாம் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை இலங்கைக்குள் கொண்டு வரவோ அல்லது சேர்க்கவோ இல்லை எனவும், அவ்வாறு செய்தவர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அரசியல் அவதூறுகளுக்காக தன்னைப் போன்ற அப்பாவி ஒருவர் நேரடியாகவே இவ்வாறான குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.