மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, சுற்றுலாத்துறையின் முக்கிய பங்குதாரர்கள், பொறுப்பான அமைச்சர்கள் பெருமளவிலான பணச்செலவில் நத்தார் பண்டிகையை கொண்டாட தயாராகி வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
மட்டுமாகலை புனித இருதய தேவாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட சுற்றுலாத்துறையின் தலைவர்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடும் வகையில் கொழும்பு நகரை மின்விளக்குகளால் அலங்கரிக்க திட்டமிட்டிருப்பதை அறிந்தேன். ஷ
இவ்வாறு செய்வதால் கிடைக்கும் பயன் என்ன? மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. உலகில் எல்லா நாடுகளிடமும் பிச்சை எடுக்கும் நாடாக இலங்கை மாறிவிட்டது.
தலைவர்களுக்கு ஏழைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவர்கள் நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். மாறாக மக்களிடம் சென்று அவர்களின் வலிகள் மற்றும் துன்பங்களை விசாரிப்பார்கள். எவ்வாறாயினும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கடமையை புறக்கணித்து ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
இன்று உணவின்றி நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். குழந்தைகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து இல்லாததால் நோய்வாய்ப்படுகிறார்கள். எனினும், தலைவர்கள் மக்களின் துயரங்களைக் கண்டும் காணாதது போல் செயற்படுகின்றனர் என்றார்.