நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை பாராமரிப்பதற்காக 12 ஆண்டுகளாக சீன நிறுவனத்திற்கு செலுத்திய பணத்தில் நாட்டுக்கு தேவையான மற்றுமொரு அனல் மின் நிலையத்தை நிர்மாணித்திருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பராமரிக்க இலங்கையின் பொறியியலாளர்கள் மற்றும் தொழிற்நுட்பவியலாளர்கள் இல்லையா?
சீன நிறுவனத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதால், அவர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை அப்பாவி மக்களே செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரித்துள்ளமை மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாகியுள்ளது.
64 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினாலும் வறிய மக்களுக்கு அது 200 வீதமாக அதிகரித்துள்ளது.
குறைந்த வருமானமீட்டும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக கூறினாலும் அரசாங்கத்தின் சார்பில் அதற்கான யோசனைகளோ, வேலைத்திட்டங்களோ முன்வைக்கப்படும் விதத்தை காண முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.