எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஆலோசனைக் குழு மற்றும் அதிகாரி குழு நியமிக்கப்படும்.
அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
QR குறியீடு திட்டத்தின் மூலம் எரிபொருளை பெறுவதில் தவிக்கும் மக்களுக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் நிவாரணம் கிடைக்கும்.
மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பமான QR குறியீடு முறை தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதற்கு 40 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் வழங்கப்படுகிறது.
இபோச பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை பேருந்துகள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள், காவுகை வண்டிகள், விவசாய உபகரணங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் நிலையங்களுக்கு 107 இபோச டிப்போக்களில் இருந்து எரிபொருள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டி விவசாய இயந்திரங்களை ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பொலிஸ் மற்றும் பிரதேச செயலாளர்கள் மூலம் பதிவு செய்து அதனை அடுத்த இரண்டு நாட்களில் எரிசக்தி அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு எரிசக்தி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.