முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்திருந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் சீன நிறுவனத்தின் 8 மீன்பிடி கப்பல்களை இலங்கைக்கு வரவழைத்தமை மற்றும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் ராஜித சேனாரத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான இந்த வழக்கை திரும்ப பெறுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு ‘ஊழல்’ என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், தாம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை திரும்ப பெற்றுக்கொள்வதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இதற்கு அமைய வழக்கை திரும்ப பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.