ஹொரணை, பொக்குணு விட்ட பிரதேசத்தில் கார் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஹொரணை, பொக்குண விட்ட பிரதேசத்தில் பாதசாரி கடவையில் பயணித்த பெண் ஒருவர் இராணுவ கோப்ரல் ஒருவர் செலுத்திய கார் மோதியதில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஹல்தொட்ட, லெனவர பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் ஒரு வைத்தியரின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிவதாகவும், நகரின் பாதசாரி கடவையில் வீதியைக் கடக்கும்போது, பண்டாரகமவிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த கார் மோதியதில் சுமார் 12 அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பெண் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ கோப்ரல் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கோப்ரல் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.