பாணந்துறை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இருவரில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இளைஞன் காணாமல் போயுள்ளதாகவும் பாணந்துறை உயிர்பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறை தோட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மொஹமட் ரிஹான் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞன் உட்பட 5 பேர் பாணந்துறை சிறுவர் பூங்காவிற்கு முன்னால் உள்ள கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர், இரண்டு பொலிஸாரும் கடற்படையின் உயிர்காப்புப் படையினரும் ஒரு இளைஞனைக் காப்பாற்றியுள்ளதுடன், மற்றைய இளைஞன் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் பொலிஸாரும் கடற்படையின் உயிர்காக்கும் படையினரும் தற்போது பாணந்துறை கடற்கரையில் கண்காணித்து வருகின்றனர்.
முதலுதவிக்கு பின்னர் மீட்கப்பட்ட இளைஞர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
