யாழ்ப்பாணம் – நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று (21) இரவு 11 மணியளவில் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு முன்புறமாக உள்ள எரிபொருள் நிலையத்தில் குறித்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நெல்லியடி நகரிலுள்ள கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரே கத்தியால் வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு இளைஞர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சென்று குறித்த ஊழியருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, ஊழியரை திடீரென கத்தியால் அவர்கள் தாக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக சிசிரிவி காணொளியை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.