பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதோடு ஒரு சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வேலைநிறுத்தம் அமுலில் இருந்த போதிலும், நேற்று சுமார் 70 ரயில் பயணங்கள் நடத்தப்பட்டதாக ரயில்வே பதில் பொது மேலாளர் எஸ்.எஸ்.முதலிகே குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாமல், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.